கொச்சி: கோடை வெப்பம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், இடுக்கி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகின்றது.
அணையின் மொத்த கொள்ளளவில் 35 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 2,337 அடியாக உள்ளது.
கடந்தாண்டு இதே காலகட்டத்தில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யபட்டதால் அணையின் நீர்மட்டம் 2,330-ஆக இருந்தது. ஆனால், நிகழ்வாண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் உற்பத்தி குறைக்கப்பட்ட போதிலும் அணையின் நீர்மட்டம் 2,337 அடியாக குறைந்துள்ளது.
மேலும், அணையின் நீர்மட்டம் 2,280-க்கும் குறைவாக சென்றால் குழாய் வழியாக மூலமட்டத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனை தவிர்க்க மூலமட்டத்தில் உள்ள 6 மின்சார உற்பத்தி கலன்களில் 5-ஐ மட்டுமே கேரள மின்வாரியம் உபயோகித்து வருகின்றது. உற்பத்திக்கு பிறகு 45.349 மீட்டர் அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
மேலும், அதிக மின்நுகர்வு ஏற்பட்டால் மாற்று முறைகளை பின்பற்ற கேரள அரசுடன் மின்வாரியம் ஆலோசித்து வருகின்றது.