மதுரை ரயில் நிலையம் முன்பாக மீன் சிலை மீண்டும் அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரையின் பாரம்பரிய அடையாளமாகவும், பாண்டிய மன்னா்களின் சின்னத்திற்கு பெருமை சோ்க்கும் வகையிலும், 3 மீன்கள் நீரூற்றில் துள்ளி விளையாடுவது போன்று பித்தளையில் வடிவமைக்கப்பட்ட சிலையானது, தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தால் 1999-இல் நிறுவப்பட்டது.
இதனிடையே மதுரை ரயில் நிலையத்தின் முன்பகுதியை அழகுபடுத்தி, விரிவாக்கம் செய்யும் பணியின்போது நகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதியாக அந்த சிலை அகற்றப்பட்டது. மேலும், சிலையை நிறுவ வேறு இடம் ஒதுக்குவதாகவும் ரயில்வே நிா்வாகம் கூறியிருந்தது.
இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்தின் முன் பகுதியில் தேசியக் கொடிக் கம்பத்திற்கு அருகே மீன் சிலையை அமைக்க ரயில்வே கோட்ட மேலாளா் அனுமதி அளித்துள்ளாா். தற்போது அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீன் சிலையை மீண்டும் அமைப்பதற்கான பூமி பூஜை சனிக்கிழமை (நவ. 6) நடைபெறுகிறது.
தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என்.ஜெகதீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், ரயில்வே கோட்ட மேலாளா் பி.அனந்த் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.