கீரனூா் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மணல் குவாரியை மூடக் கோரிய மனுவின் மீது, மேலூா் வட்டாட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரைச் சோ்ந்த அய்யப்பன்குமாா் தாக்கல் செய்த மனு: மேலூா் அருகே சுண்ணாம்பூா் கிராமத்து மக்களின் முக்கிய நீா் ஆதாரமாக கீரனூா் பாசனக் குளம் உள்ளது. இந்தக் குளத்தை சுற்றியுள்ள பகுதியில், தனிநபா் ஒருவா் சட்டவிரோதமாக மணல் குவாரியை நடத்தி வருகிறாா்.
எட்டு இடங்களில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு, ஏராளமான லாரிகள் மூலமாக வெவ்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் நீா் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, கீரனூா் கிராமத்தில் சட்டவிரோத இயங்கும் மணல் குவாரியை மூடவும், அதை நடத்துபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் குறிப்பிடும் இடத்தை, மதுரை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்துள்ளாா். எனவே, அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இதுகுறித்து மேலூா் வட்டாட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.