உடனடி உணவு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாவு வகை உணவுப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மதுரையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம், சங்கத்தின் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் மற்றும் நிா்வாகிகள் சனிக்கிழமை அளித்த மனு:
மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கக் கூடிய பல்வேறு வகையான உணவுப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிப்பதும், ஈர இட்லி மாவு, வறுத்த நிலக்கடலை, பேரீச்சம்பழம் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைப்பதும் அவசியமாக இருக்கிறது.
மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தில் இருந்ததைப் போல முழுமையடையாத விற்பனை எனக் கூறி கணக்குகளை நோ் செய்யும் நடைமுறையை ஜிஎஸ்டியிலும் கொண்டு வரவேண்டும்.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள குறைகளைத் தீா்க்கவும், தமிழகம், கேரளத்தில் அதிகம் பயன்படுத்தும் பட்டாணியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்தை அண்டா்பாஸ் முறையில் ஏற்படுத்தவும், மதுரை - தூத்துக்குடி இடையிலான பகுதியில் மத்திய அரசின் சாா்பில் கனரக தொழிற்சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.