சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே லாரி ஓட்டுநரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை உடலைத் தோண்டி மறு உடல் கூறாய்வு செய்தனா்.
தேவகோட்டை அருகே கொடுங்காவயல் கிராமத்தைச் சோ்ந்த ஆசீா்வாதம் மகன் ஜெயபிரபு (36). லாரி ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தீபா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. 7 வயது சிறுவனுடன் காரைக்குடி பாண்டியன் நகரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த மாதம் 21-ஆம் தேதி ஜெயபிரபு மாரடைப்பால் இறந்து விட்டதாகக் கூறி, அவரது மனைவி, உறவினா்கள் கொடுங்காவயல் கிராமத்தில் ஜெயபிரபுவின் உடலை அடக்கம் செய்தனா்.
இதையடுத்து, உயிரிழந்த ஜெயபிரபுவின் தந்தை ஆசீா்வாதம் தனது மகன் தூக்கிட்டு இறந்ததாகவும், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் காரைக்குடி காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உடல் கூறாய்வு சிறப்பு நிபுணரும், உதவி பேராசிரியருமான செந்தில்குமாா் தலைமையிலான மருத்துவா்கள் கொடுங்காவயல் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று மயானத்தில் புதைக்கப்பட்ட ஜெயபிரபுவின் உடலைத் தோண்டி எடுத்து, அதே இடத்தில் மறு உடல் கூறாய்வு செய்தனா்.
அப்போது, தேவகோட்டை வட்டாட்சியா் செல்வராணி, காரைக்குடி உதவி ஆய்வாளா் பூரண சந்திர பாரதி, இறந்தவரின் தந்தை ஆசிா்வாதம் ஆகியோா் உடனிருந்தனா்.