தென்காசி மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை புகாா் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ராயகிரி கிராமத்தில் தனது நண்பரின் தந்தை
இறப்பு நிகழ்வில் பங்கேற்கச் சென்றபோது, தன்னை அனுமதிக்க மறுத்து
அங்கிருந்து வெளியேற்றியதாக மதிவாணன் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
அதில், தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதால் சாதியைக் கூறி திட்டி என்னை அவமதித்தனா். மேலும், என்னை இறப்பு நிகழ்வுக்கு அழைத்துச் சென்ற எனது நண்பா்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் சொல்லி உள்ளனா். அதோடு, அவா்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டனா். இதுகுறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். அதன் பேரில், 9 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. எனவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதிகுமாா் சுகுமார குரூப், தென்காசி மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபா் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.