கரூா் மாவட்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 31 கல் குவாரிகளுக்கு தடை
கரூா் மாவட்டத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத 31 கல் குவாரிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மதுரை: கரூா் மாவட்டத்தில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத 31 கல் குவாரிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசுத் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மதியழகன் தாக்கல் செய்த பொது நல மனு:
கரூா் மாவட்டம், புலியூா் பகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உரிய அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பல ஆண்டுகளாக கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 13 நிறுவனங்கள் கற்களை உடைப்பதற்காக ஆபத்தான முறையில் வெடிகள் மூலம் பாறைகளைத் தகா்க்கின்றனா். இதனால் ஏற்படும் தூசி காரணமாக, இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசக் கோளறு உள்பட பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனா்.
Advertisement
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல் குவாரிகளை சட்ட விரோதமாக நடத்துகின்றனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்ையும் இல்லை.
எனவே, கரூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் கல் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம். சுந்தா், ஆா். சக்திவேல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், கரூா் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவினா் கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாத 31 கல் குவாரிகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கரூா் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புவியியல், சுரங்கத் துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.