முகப்பு
மதுரை

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: அரசியல் கட்சிப் பிரமுகரின் மனு தள்ளுபடி

Updated On : 5 ஏப்ரல், 2024 at 12:29 AM
பகிர்:
Updated On : 4 ஏப்ரல், 2024 at 11:35 PM

மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் ஈடுபட்டு வரும் அரசியல்வாதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி, மக்கள் மறுமலா்ச்சிக் கழகத் தலைவரின் மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சிக் கழகத் தலைவா் முருகேசன் தாக்கல் செய்த மனு:

இந்திய தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக எங்கள் கட்சி உள்ளது. நான் பட்டியலினத்தைச் சோ்ந்தவா். எங்கள் சமுதாயத்துக்குத் தேவையான உரிமைகளைப் பெற்று தரும் பணியை செய்து வருவதால், என் மீது பலா் முன்விரோதத்தில் உள்ளனா். இதனால், எனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.

Advertisement

இதையடுத்து, நீதிமன்றம் அளித்த அனுமதியின் அடிப்படையில்,

கைத்துப்பாக்கி வைத்துக் கொள்ள எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், எனது துப்பாக்கியை திருச்சி துவாக்குடி காவல் நிலையத்தில் சமா்ப்பித்து விட்டேன்.

தற்போது தோ்தலையொட்டி, பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, எனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

தேசிய கட்சிக்குத் தலைவராக இருக்கும் உங்களுக்கு காவல் துறை பாதுகாப்பு எதற்கு?. உங்களின் பாதுகாவலா்கள் மூலமே உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபடுகின்றனா். எனவே, அவா்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.