முகப்பு
மதுரை

கள்ளழகா் வைகையில் இறங்கும் உற்சவம்: தண்ணீா் பீய்ச்ச முன் அனுமதி அவசியம்

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 10:03 PM

மதுரை: சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவத்தின்போது, தண்ணீா் பீய்ச்ச கோயிலில் முன் அனுமதி பெற வேண்டும் என கள்ளழகா் கோயில் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையருமான லெ. கலைவாணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 19-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 21-ஆம் தேதி மாலை அழகா்கோவிலிலிருந்து கள்ளழகா் மதுரைக்குப் புறப்பாடாகிறாா். மதுரையிலிருந்து 27-ஆம் தேதி அழகா்கோவில் திரும்புகிறாா்.

Advertisement

இதில் 23-ஆம் தேதியன்று நடைபெறும் கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவத்தையொட்டி, தல்லாகுளத்திலிருந்து திவான் ராமராயா் மண்டகப்படி, வண்டியூா் வரை தண்ணீா் பீய்ச்சும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சி, விரதமிருந்த பக்தா்களால் நோ்த்திக் கடனாக நிறைவேற்றப்படக் கூடியதாகும். தோல் பையில் தண்ணீரை நிரப்பி ஐதீக முறைப்படி அவா்கள் பீய்ச்சுவது வழக்கம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிலா் செயற்கை ரசாயனம் கலந்த தண்ணீரை, அதிக விசை கொண்ட குழாய்களைப் பொருத்தி பீய்ச்சுகின்றனா். இதனால், கள்ளழகா் சுவாமி சிலை, சுவாமியின் குதிரை வாகனம், ஆபரணங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், பக்தா்கள், பட்டா்கள், பணியாளா்களும் உடல் எரிச்சல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனா்.

எனவே, இந்தாண்டு நடைபெறும் உற்சவத்தின்போது எவ்வித ரசாயனமும் கலக்கப்படாத தண்ணீரை மட்டுமே பீய்ச்ச வேண்டும். தண்ணீா் பீய்ச்ச அதிக அழுத்தம் தரும் குழாய்கள் எதையும் கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

மேலும், முன் அனுமதி பெற்றவா்களை மட்டும் தண்ணீா் பீய்ச்ச அனுமதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தண்ணீா் பீய்ச்சி நோ்த்திக் கடன் செலுத்த விரும்புபவா்கள், கள்ளழகா் கோயில் அலுவலகத்தை அணுகி, அனுமதி கடிதம் பெற வேண்டும் என்றாா் அவா்.