முகப்பு
மதுரை

சமுதாய முன்னேற்றத்துக்கு கல்வி அவசியம்

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 10:52 PM
மதுரை உத்தங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை சனிக்கிழமை திறந்து வைத்த அமைச்சா் பி. மூா்த்தி. உடன் மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா உள்ளிட்டோா்.
பகிர்:

சமுதாய முன்னேற்றத்துக்கு கல்வி அவசியம் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா். மதுரை உத்தங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.80 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ.சங்கீதா தலைமை வகித்தாா். வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்துப் பேசியதாவது : கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளியோா் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாணவ, மாணவிகள் எந்தவித சிரமமுமின்றி கல்வி கற்கும் வகையில் புதிய பள்ளிகள் கட்டுதல், ஏற்கெனவே சிதிலமடைந்த பள்ளிகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவிகள் அனைவரும் உயா் கல்வியைத் தொடர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் மட்டுமன்றி சமுதாயம் முன்னேற்றம் அடைய கல்வி அவசியம் என்றாா் அவா். இந்த நிகழ்வில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சூரியகலா கலாநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி மணிமேகலை, ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவி முருகேஸ்வரி சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.