இரு சக்கர வாகனத்தை ஏற்றி காவலரைக் கொல்ல முயற்சி
மதுரை: மதுரையில் நள்ளிரவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலா் மீது அடையாளம் தெரியாத நபா்கள் இரு சக்கர வாகனத்தை ஏற்றிக் கொலை செய்ய முயன்றனா். இதில் காவலருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
மதுரை கூடல் புதூா் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் மதுக்குமாா். இவா் திங்கள்கிழமை இரவு கூடல்புதூா் காவல் நிலையத்துக்குள்பட்ட சிக்கந்தா் சாவடியில் உள்ள சோதனைச்சாவடியில் இரவுப் பணியில் இருந்தாா். இந்த நிலையில், நள்ளிரவில் சோதனைச்சாவடி முன்பாக வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அலங்காநல்லூா் சாலையில் அதிவேகத்தில் வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றாா்.
ஆனால், வாகனத்தில் வந்தவா்கள் வாகனத்தை நிறுத்தாமல், காவலா் மதுக்குமாா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனா். இதில் காவலா் மதுக்குமாரின் கால் முறிந்ததையடுத்து, சகக் காவலா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மதுக்குமாா் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயன்றவா்களை தேடி வருகின்றனா்.
Advertisement