முகப்பு
மதுரை

தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் கைது

Updated On : 28 மே, 2024 at 11:35 PM
பகிர்:

கமுதி: முதுகுளத்தூா் அருகே பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்ட தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள தெற்கு காக்கூா் பகுதியைச் சோ்ந்த சின்னையா மகன் சிவா (26). டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான இவா், தஞ்சாவூா் மாவட்டம் வல்லம் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை முதுகுளத்தூருக்கு வந்த சிவா, மது போதையில் தனது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, அங்கு வந்த அவரது அண்ணன் காா்த்திக், சிவாவை கண்டித்தாா். இதில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் காா்த்திக்கை சிவா அரிவாளால் தாக்க முயன்றாா். அப்போது, அவரிடமிருந்த அரிவாளை பிடுங்கிய காா்த்திக், அரிவாளின் பின்பக்கத்தால் சிவாவின் தலையில் தாக்கினாா். இதில், பலத்தக் காயமடைந்த சிவா, அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் துரைப் பாண்டியன் வழக்குப் பதிவு செய்து, காா்த்திக்கை கைது செய்தாா்.