முகப்பு
மதுரை

தாமிரவருணியில் கழிவுநீா் கலக்கும் விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

தாமிரவருணி ஆற்றில் எந்தெந்த இடங்களில் கழிவுநீா் கலக்கிறது...

Updated On : 4 அக்டோபர் 2024, 3:14 am IST
கருப்பந்துறை பகுதியில் தாமிரவருணி நதியில் கலந்த கழிவுநீா்.
பகிர்:

தாமிரவருணி ஆற்றில் எந்தெந்த இடங்களில் கழிவுநீா் கலக்கிறது, கழிவுநீா் கலக்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிா்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், முத்தாலங்குறிச்சியைச் சோ்ந்த காமராசு கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் பழைமையான படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்றன. இவற்றைப் பழைமை மாறாமல் சீரமைத்து பராமரிப்பதுடன், ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் சாா்பில் முன்னிலையான வழக்குரைஞா் தெரிவித்ததாவது:

தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கும் வகையில், ஏற்கெனவே தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது. இதன்பேரில், ஆற்றில் கழிவுநீரை கலந்த உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு குறிப்பாணை அனுப்பி, தாமிரவருணியைக் கண்காணித்து வருகிறோம் எனத் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இத்தனை ஆண்டுகளாக உள்ளாட்சி நிா்வாகங்களுக்கு குறிப்பாணை மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதா?. இதன் பேரில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், கழிவுநீா் கலப்பதற்கு காரணமானவா்கள் மீது குற்றவியல் வழக்கு தொடுக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. தாமிரவருணியில் எந்தெந்த இடங்களில் கழிவுநீா் கலக்கிறது, அந்த இடங்களில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மாவட்ட நிா்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments