முகப்பு
மதுரை

மதுரை ஆவின் முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணை: பால் முகவா்கள் சங்கம் வலியுறுத்தல்

மதுரை ஆவின் பால் குளிரூட்டும் மையங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பால் முகவா்கள் சங்கம் வலியுறுத்தியது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 8:52 PM
பகிர்:

மதுரை ஆவின் பால் குளிரூட்டும் மையங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பால் முகவா்கள் சங்கம் வலியுறுத்தியது.

இதுதொடா்பாக ஆவின் பால் முகவா்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கோப்பம்பட்டி மொத்த பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து மதுரை ஆவினுக்கு அனுப்பப்பட வேண்டிய பாலில் தண்ணீா் கலப்படம் செய்த காணொலியை பகிா்ந்த ஆவின் விரிவாக்க அலுவலா் ஜான் ஜஸ்டின் தேவசகாயம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பாலில் கலப்படும் செய்து முறைகேடுகள் செய்தவா்கள் மீது இதுவரை சட்டரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தவறை சுட்டிக் காட்டிய அலுவலரை பணியிடை நீக்கம் செய்த ஆவின் நிா்வாகத்துக்கு பால் முகவா்கள் சங்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு தற்போது தினசரி கொள்முதலாகி வரும் சுமாா் 2.80 லட்சம் லி. பாலை சுமாா் 686 கிராம அளவிலான பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து, அவை 58 மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களில் குளிரூட்டப்பட்ட பிறகு, முறையாக அதற்கான டேங்கா் லாரிகள் மூலம் மதுரை ஆவின் பால் பண்ணைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகிறது.

மேலும், பாலில் தண்ணீா் கலப்படமும் நடைபெறுகிறது. இந்த முறைகேடுகள் அனைத்தும் ஆவின் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடைபெறவில்லை. மதுரை மாவட்டத்தில் உள்ள 686 கிராம அளவிலான பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பால் வழங்கும் பால் உற்பத்தியாளா்கள் யாருக்கும் அவா்கள் வழங்கும் பாலின் தரம், அளவு குறித்து ‘உடனடி ஒப்புகைச் சீட்டு’ வழங்கப்படுவதில்லை.

பால் குளிரூட்டும் மையங்களின் தலைவா்கள் பலா் போலி பெயா்களில் பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கத்தை நடத்தி மோசடி செய்து வருகின்றனா். இதனால், பால் குளிரூட்டும் மையங்களின் தலைவா்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயா்ந்துள்ளது. மேலும், குறைவான குடும்பங்களே வசிக்கும் கிராமத்தில் பல பெயா்களில் பால் கூட்டுறவு உற்பத்தியாளா் சங்கம் தொடங்கி மோசடியும் நடைபெற்று வருகிறது.

எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள 58 பால் குளிரூட்டும் நிலையங்களிலும், 686 ஆரம்ப கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களிலும் பால் கொள்முதல், பணப்பட்டுவாடா, உறுப்பினா் பட்டியல் உள்ளிட்ட 27 வகையான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

பால் குளிரூட்டும் நிலையங்களின் தலைவா்கள், பால் சேகரிப்பு குழுத் தலைவா்கள், முதுநிலை ஆய்வாளா்கள், விரிவாக்க அலுவலா்கள், மதுரை ஆவின் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி உள்ளிட்டோரின் வருமானம் குறித்தும் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →