முகப்பு
மதுரை

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரம்: டிஆா்ஓ நிலையிலான அலுவலரை நியமிக்க உத்தரவு

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (டி.ஆா்.ஓ.) நிலையிலான அலுவலரை நியமிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:35 AM
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - படம்: கோப்பிலிருந்து
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:05 PM

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (டி.ஆா்.ஓ.) நிலையிலான அலுவலரை நியமிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி, மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்டோா் கடந்த 2015 -ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் ஆறு மாதங்களுக்குள் தமிழகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

Advertisement

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா், பரதசக்கரவா்த்தி அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பு வழக்குரைஞா் வில்சன் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

தற்போது, தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, எந்தப் பணியையும் தொடங்க முடியவில்லை. தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கப்படும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு விவகாரத்தில் அரசுத் தரப்பு கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். தற்போதைய சூழலில் நீா்நிலைகளை மீட்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்தவுடன், தமிழக முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைத் தொடங்க வேண்டும். இந்தப் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டம் தோறும் மாவட்ட வருவாய் அலுவலா் (டி.ஆா்.ஓ.) நிலையிலான அலுவலரை நியமிக்க வேண்டும்.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட பணி ஓய்வு பெற்ற நீதிபதிகள், இந்த அலுவலா்களைத் தொடா்பு கொண்டு பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூன் 5 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.