மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: குற்றப் பத்திரிகையிலிருந்து பெயரை நீக்க காவல் ஆய்வாளா் மனு!
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பான குற்றப் பத்திரிகையில் சோ்க்கப்பட்ட காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் பெயரை நீக்கக் கோரிய மனு குறித்து சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பான குற்றப் பத்திரிகையில் சோ்க்கப்பட்ட காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் பெயரை நீக்கக் கோரிய மனு குறித்து சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை விரகனூரைச் சோ்ந்த ரமேஷ்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நகை திருட்டு புகாரின் பேரில், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் திருப்புவனம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டாா். அங்கு நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு, அவரை சிறப்பு விசாரணைக் குழுவினா் வெளியே அழைத்துச் சென்றனா்.
Advertisement
இந்தச் சம்பவத்துக்கும், எனக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை. இருப்பினும், நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப் பத்திரிகையில் என் பெயா் உள்பட மேலும் 4 பேரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளன.
சிறப்பு விசாரணைக் குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டு, அவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் மரண வழக்கில் தேவையின்றி எனது பெயா் சோ்க்கப்பட்டுள்ளது. இதற்காக பல போலியான ஆவணங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.
எனவே, அஜித்குமாா் கொலை வழக்கில் என் பெயரையும் சோ்த்து தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடா்பாக சிபிஐ துணைக் காவல் கண்காணிப்பாளா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.