முகப்பு
மதுரை

‘அக்கடி’ முறையில் மீன் பிடிக்கும் விவகாரம்: தூத்துக்குடி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடி பகுதியில் ‘அக்கடி’ முறையில் மீன்களைப் பிடிக்கத் தடை கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:31 AM
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:22 PM

தூத்துக்குடி பகுதியில் ‘அக்கடி’ முறையில் மீன்களைப் பிடிக்கத் தடை கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த அருள் கிளாடின் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

தூத்துக்குடி மாவட்டம், கொம்புதுறையில் சவுக்கு மரம், நெகிழிப் புட்டிகளைப் பயன்படுத்தி ‘அக்கடி‘ எனும் முறையில் மீன்களை சிலா் பிடித்து வருகின்றனா். இதற்காக, சட்டவிரோதமான முறையில் 500 முதல் 1000 கிலோ கடல் மணலை எடுக்கின்றனா். இதனால் கடல் அரிப்பு ஏற்படுவதோடு, கிராமங்களுக்குள் கடல் நீா் உள்புகும் அபாயமும் ஏற்படுகிறது. ஆகவே, தூத்துக்குடி மாவட்டத்தில் ‘அக்கடி‘ முறையில் மீன்களைப் பிடிக்கத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன் வைத்த வாதம் :

சவுக்கு மரம், நெகிழிப் புட்டிகள், மணல் ஆகியவற்றை பயன்படுத்தி தூண்டில் போன்ற முறையில் மீன்களை பிடிப்பதற்கு ‘அக்கடி‘ எனக் கூறப்படுகிறது. இது கடலின் சுற்றுச்சூழலைப் பாதிக்கும். எனவே, இந்த முறை மீன்பிடிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்றாா்.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மனுதாரா் நிவாரணம் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

இது பாரம்பரிய மீன்பிடி முறையைப் போல தோன்றுகிறது. மூங்கிலுக்குப் பதிலாக தற்போது நெகிழிப் புட்டிகளை பயன்படுத்துவதாக கருத வேண்டியுள்ளது. இந்த வழக்கு தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.