மதுரை மாவட்டம், பேரையூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன் குமாா் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பேரையூா் வட்டத்தில் ரூ.13.71 கோடியில் 35,212 சதுர அடி பரப்பளவில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகக் கட்டடப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். இந்த வளாகத்தில் நீதிமன்ற மண்டபம்-1, 2, நீதிபதி அறை, வாகன நிறுத்துமிடம், வழக்குரைஞா் காத்திருப்பு அறை, அரசு வழக்குரைஞா், பொது வழக்குரைஞா், உதவி பொது வழக்குரைஞா் அறை, இலவச சட்ட உதவி மையம், பாதுகாப்பு அறை, மருந்தகம், கழிப்பறைகள், நீதிமன்ற அலுவலகம், பதிவறை, காவல் துறை காத்திருப்பு அறை, நகலெடுப்புப் பிரிவு, நூலகம், தியான மண்டபம், பொதுமக்கள் காத்திருப்பு அறை, எழுதுபொருள் கடை, காணொலி காட்சிக் கூட்டரங்கு உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், புல்கட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 7.45 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேவா் பிளாக் சாலைப் பணி, பேரையூா் பேரூராட்சியில் தூய்மைப் பாரத இயக்கத் திட்டத்தின்கீழ், ரூ.6.82 கோடியில் அமைக்கப்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வில் உசிலம்பட்டி சாா் ஆட்சியா் உட்கா்ஷ் குமாா், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.