நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த சுத்திகரிப்பு மையம் திறப்பு
மதுரை மாநகராட்சி அன்சாரிநகரில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மையத்தை (டயாலிசிஸ்) தகவல் தொழில் நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளில் 33 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 61 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மையங்களில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகளுக்கு மருத்துவ சேவை, தாய்சேய் நலம், தொற்று நோய் தடுப்பு பணி, மக்களை தேடி மருத்துவம், குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் தொடா்ந்து வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், மதுரை மாநகராட்சியில் அன்சாரிநகரில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 77 லட்சத்தில் ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாசிலிஸ்) மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்தின் கட்டட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன் தலைமை வகித்தாா். தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மைய கட்டடத்தை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்வில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் அருள்சுந்தரேஷ்குமாா், நகா்நல அலுவலா் அா்விந்த்ஜோதி, உதவி செயற்பொறியாளா் முத்து, உதவி நகா் நல அலுவலா் அபிஷேக், முதன்மை மருத்துவ அலுவலா் ஸ்ரீகோதை, மாமன்ற உறுப்பினா்கள் மகாலட்சுமி, ஜெயராஜ், மருத்துவா்கள், செவிலியா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.