முகப்பு
மதுரை

மானாமதுரை இளைஞா் உயிரிழந்த வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

மானாமதுரையில் போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த விவகாரம் தொடா்பான வழக்கு தீா்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 14 மார்ச், 2026 at 2:10 AM
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
பகிர்:

மானாமதுரையில் போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த விவகாரம் தொடா்பான வழக்கு தீா்ப்புக்காக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சியோன் நகரில் கடந்த 5-ஆம் தேதி இரவு உணவகம், கோழிக் கடையில் பணிபுரியும் தொழிலாளா்களான ஜெயக்குமாா், அழகா் ஆகிய இருவரையும் வாளால் வெட்டியதாக மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் என்ற டெலிசன், அதே பகுதியைச் சோ்ந்த குணா ஆகியோரை மானாமதுரை போலீஸாா் தேடி வந்தனா்.

மானாமதுரை மேலப்பசலை பாலம் அருகே பதுங்கி இருந்த இருவரையும் பிடிக்க போலீஸாா் அங்கு சென்றபோது, தப்பியோட முயன்ற ஆகாஷ் கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு, போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். காயமடைந்த ஆகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா். அவரது உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஆகாஷின் தந்தை ராஜேஸ்கண்ணன் தாக்கல் செய்த மனு:

எனது மகன் உயிரிழப்புக்கு காரணமான காவல் துறையினா் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய வேண்டும். எங்கள் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பாதுகாக்க வேண்டும். குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்ற நீதிபதி முன்னிலையில் உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆகாஷ் உடல் கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டது. ரூ. 12 லட்சம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நிதி இல்லை எனக் கூறுவதை ஏற்க இயலாது என்றாா்.

அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ஆகாஷின் உடலை வாங்க உறவினா்கள் மறுத்து வருகின்றனா் என்றனா்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி விக்டோரியா கெளரி, இந்த வழக்கை தீா்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →