ராமநாதபுரம் மாவட்டம், காட்டுப்பரமக்குடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பில் தொடர்ந்து 6-ஆவது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதை அடுத்து, அப்பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளுக்கு அக் கிராம மக்கள் சார்பில் சனிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவுக்கு, கிராமத் தலைவர் எம். கருப்பையா தலைமை வகித்தார். கிராம நிர்வாகிகள் எம். கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி, முன்னாள் தலைமையாசிரியர் ஹரிதாஸ், துவக்கப் பள்ளித் தலைமையாசிரியை பூர்ணிமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட குழந்தைகள் நல மருத்துவர் கே.ஆர். பார்த்தசாரதி, எலும்பு முறிவு மருத்துவர் ஏ. ராமதாஸ் ஆகியோர் ஆதிதிராவிடர் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், 10 ஆம் வகுப்பில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்த ஆசிரிய-ஆசிரியைகளைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கி கெளரவித்தனர். முன்னதாக, பள்ளி தலைமையாசிரியர் செந்தில்குமார் வரவேற்றார்.
இந்த விழாவில், பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், கிராமப் பொதுமக்கள், நகர் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர் தில்லைநடராஜன் செய்திருந்தார். பள்ளி உதவி தலைமையாசிரியர் பூவலிங்கம் நன்றி கூறினார்.