ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி விரட்டியடிப்பு: வலைகளை அறுத்து இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேசுவரம் மீனவர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை கற்களை வீசி தாக்கியதோடு, வலைகளை அறுத்து எறிந்தும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம் மீனவர்கள் மீது ஞாயிற்றுக்கிழமை கற்களை வீசி தாக்கியதோடு, வலைகளை அறுத்து எறிந்தும் இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து சனிக்கிழமை 400 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது, 6 ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது பாட்டீல்கள் மற்றும் கற்களை வீசி தாக்கி விரட்டியடித்தனர். மேலும் 10 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகள் மற்றும் பலகைகளை அறுத்து கடலுக்குள் வீசி எறிந்தனர். இதனால் மீன்பிடிப்பை பாதியில் நிறுத்திய மீனவர்கள் கரை திரும்பினர்.
இதுகுறித்து மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் கூறியது: மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள்ளே வந்து தாக்குதல் நடத்துகின்றனர்.
மேலும் தடைக் காலத்தின் போது இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு உரிய இழப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தொடங்கி தடை காலத்திற்குள் நிரந்தர தீர்வு கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.