முதுகுளத்தூரில் ஜமாபந்தியில் உதவித்தொகை வழங்கல்
முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் நலிவடைந்தோருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் நலிவடைந்தோருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேலக்கொடுமலூர் உள்வட்ட வருவாய் கிராமங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து முத்ரா கடன் திட்டம், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், வறட்சி, குடிநீர் பிரச்சனை, ஆடு, மாடுகள் வழங்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக 250க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி கூறுகையில், முதியோர் உதவித்தொகை தொடர்பான மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். வருவாய் தீர்வாயத்தில் முத்ரா கடன் திட்டத்திற்கு கொடுக்கபட்ட மனுக்கள் ஆய்வு செய்யப்படும். குடிநீர் பிரச்னைகளுக்கு ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வட்டாட்சியர் எம்.மீனாட்சி கூறுகையில், இதுவரை பெறப்பட்ட மனுக்களை கிராம நிர்வாக அலுவலர்கள் ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதில் 2 பேருக்கு நலிந்தோர் உதவித்தொகை ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி வழங்கினார். முன்னதாக வட்டாட்சியர் எம்.மீனாட்சி, சமூக நலப் பாதுகாப்பு வட்டாட்சியர் சேகர், கிராம நிர்வாகச் சங்க மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் மேலக்கொடுமலூர் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.