முதுகுளத்தூரில் 2 நாள்களாக மின்தடை: பொதுமக்கள் அவதி
முதுகுளத்தூரில் இரண்டு நாட்கள் முன் அறிவிப்பு இல்லாமல் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
முதுகுளத்தூரில் இரண்டு நாட்கள் முன் அறிவிப்பு இல்லாமல் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வெள்ளி, சனிக்கிழமை இரவு பகலாக தொடர்ந்து மின் தடை ஏற்பட்டது. முதுகுளத்தூரில் துணை மின் நிலையம் 2005 ல் நிறுவப்பட்டது. கமுதி மின் நிலையத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தூரம் முதுகுளத்தூர் துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வருகிறது. கமுதியில் இருந்து வரும் மின்வயர்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் மாற்றியமைத்து, 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சிறிய மழை பெய்தால் கூட இப்பகுதிகளில் டிரான்ஸ்பார்மர்களில் பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. அடிக்கடி ஏற்படும் மின் தடையால் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கோடை வெயில் அதிகரிப்பால் வீட்டில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் வியாபாரிகளும், மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இதுகுறித்து மின் அலுவலர்களிடம் கேட்ட போது, முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. சிறிய மழை பெய்தால் கூட டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்து விடுகின்றன. 1 வருடத்திற்கு முன்பே பழுதடைந்த டிரான்ஸ்பாம்களை கணக்கெடுத்து மாற்றுமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றார்.