முதுகுளத்தூர் அருகே தட்டனேந்தல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முதுகுளத்தூர் வட்டம் விளங்குளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட தட்டனேந்தல் கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு ரூ.3 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இத்தொட்டியை கடந்த 2013-2014 ஆம் ஆண்டில் ஊராட்சி நிதியில் மராமத்து செய்துள்ளனர். இத்தொட்டி தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எப்போது விழுமோ என கிராம மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். ஊரின் பிரதான சாலையில் அமைந்துள்ள தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்டுமாறு கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு வழங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கிராம மக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.