ராமநாதபுரத்தில் எந்தெந்த இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு மாசில்லாமல் கொண்டாட வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலத்தை மாலை 6 மணிக்கு மேல் மேற்கொள்ளக் கூடாது. சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் முன்னர் அவற்றில் உள்ள பூக்கள், மாலைகள், இலைகள், துணிகள் மற்றும் பிற ஆபரணங்கள் நீக்கப்பட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம், காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை பரிசீலித்துள்ள கீழ்க்கண்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.
விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள்: தொண்டி கடற்கரை, பாசிப்பட்டிணம் கடற்கரை, தாமோதரன்பட்டிணம் கடற்கரை, திருப்பாலைக்குடி கடற்கரை, தெற்கு வளமாவூர் கடற்கரை, உப்பூர் மோர்ப்பண்ணை கடற்கரை, தேவிபட்டிணம் நவபாஷாண கடற்கரை, முடிவீரன் பட்டிணம் கடற்கரை, நொச்சிவயல் ஊருணி, வெள்ளரி ஓடை ஊருணி, தலைதோப்பு கடற்கரை, வேலுநகர் ஊருணி, ஆற்றங்கரை ஆறு மற்றும் கடல், தர்கா வலசை கடற்கரை, பிரப்பன் வலசை கடற்கரை, மண்டபம் கடற்கரை, பாம்பன் பாலம் கடற்கரை, வில்லூண்டி தீர்த்தம், ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தக் கடற்கரை, கீழக்கரை அலவாக்கரைவாடி கடற்கரை, சின்னமாயாகுளம் கடற்கரை, சின்ன ஏர்வாடி கடற்கரை, கொட்டகுடி ஆறு, குதக்கோட்டை பெரிய ஊருணி, பெரிய பட்டிணம் இந்திரா நகர் கடற்கரை, முத்துப்பேட்டை கடற்கரை, களிமண்குண்டு சண்முகவேல் பட்டிணம் கடற்கரை, உத்தரகோசமங்கை வராஹி அம்மன் கோயில் ஊருணி, பரமக்குடி பெருமாள் கோயில் வைகை ஆறு, கமுதி செட்டியூரணி, ராமசாமிப்பட்டி வேலு ஊருணி, மேலமுந்தல் கடற்கரை, வாலிநோக்கம் கடற்கரை, எஸ்.மாரியூர் கடற்கரை, நரிப்பையூர் கடற்கரை, அம்பலத்தான் ஊருணி, முதுகுளத்தூரில் புளியங்குடி கண்மாய், பெரிய ஊருணி, சங்கரபாண்டி ஊருணி உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நீர் நிலைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் கரைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.