ராமநாதபுரத்தில் அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை மேளதாளத்துடன் இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 18 பேர் சுயேச்சைகள். அவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தனது இறுதிக்கட்டப் பிரசாரத்தை ராமநாதபுரம் நகர் அரண்மனை முன்பு மாலை 3 மணிக்கு ஆரம்பித்தார். அவருடன் அமைச்சர் எம்.மணிகண்டன், கல்வி முன்னேற்றக் கட்சியின் தலைவர் தேவநாதயாதவ் மற்றும் பாஜக பிரமுகர் குப்புராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திறந்த வாகனத்தில் தொண்டர்கள் புடைசூழச் சென்ற பாஜக வேட்பாளர் ராமநாதபுரம் கேணிக்கரை, பேருந்து நிலையங்கள் என அனைத்துப் பகுதியிலும் வலம் வந்து வாக்குச் சேகரித்தார்.
திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் கே.நவாஸ்கனியும் அரண்மனை தெருவிலிருந்து இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் திறந்த வாகனத்தில் முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம், முன்னாள் எம்பி., பவானி ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி இன்பாரகு, மாநிலத் தணிக்கைக்குழு துணைத் தலைவர் சுப.த.திவாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமதுதம்பி, நகரச்செயலர் கார்மேகம், காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அமமுக வேட்பாளர் வ.து.ந.ஆனந்த் அரண்மனைத் தெருவில் பிரசாரத்தைத் தொடங்கினார்.
நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு நிறைவு செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் செவ்வாய்க்கிழமை காலை முதல் ராமநாதபுரம் நகரில் அனைத்துப் பகுதிகளிலும் வலம் வந்து வாக்குகளைச் சேகரித்தனர்.