மதுரை மதுபானக் கூடத்தில் ஓட்டுநரை கொலை செய்த வழக்கில் மதுரை கீரைத்துறையை சேர்ந்த இளைஞர் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.
மதுரை. கோ. புதூர் அருகே அரசு மதுக்கூடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் சிவா (23) என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இது குறித்து கோ. புதூர் போலீஸார் வழக்குப் பதிந்து மதுக்கூட ஊழியர்கள் இதய ராஜா , காசாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இக் கொலையில் தொடர்புடைய மதுரை கீரைத்துறையை சேர்ந்த நல்லுச்சாமி மகன் வெற்றிச்செல்வம் (22) என்ற இளைஞர், முதுகுளத்தூரில் நீதித்துறை நடுவர் ராமசங்கரன் முன்னிலையில் வியாழக்கிழமை சரணடைந்தார். இதையடுத்து நீதித்துறை நடுவர் உத்தரவின் பேரில் வெற்றிசெல்வம் மதுரை மத்திய சிறைக்கு போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.