முதுகுளத்தூரில் நூலகத்தை அரசு கட்டடத்துக்கு மாற்றக் கோரிக்கை
முதுகுளத்தூரில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்தை அரசுக்கு சொந்தமான இடத்துக்கு மாற்றக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூரில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நூலகத்தை அரசுக்கு சொந்தமான இடத்துக்கு மாற்றக்கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மைய நூலகம் இன்று வரை தனியார் கட்டடத்தில் ரூ.4 ஆயிரம் வாடகையில் இயங்கி வருகிறது. இந்நூலகம் ஊருக்கு வெளியில் இருப்பதால் வாசகர்கள் 1 கி.மீ. தூரம் நடந்து செல்லவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இதனால் நூலகத்திற்கு செல்ல வாசகர்கள் தயக்கம் காட்டுகின்றனர். சமீப காலமாக தமிழக அரசு கல்வியாளர்களுக்கு போட்டி தேர்வின் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. இப்பகுதியில் படித்த மாணவர்கள் வெளி நகரங்களுக்கு சென்று தனியார் கல்வி நிறுவனங்களில் பணம் கொடுத்து போட்டித் தேர்வுக்கு செல்ல முடியாத நிலையில் இருப்பதால், நூலகத்திற்கு சென்று தங்களது அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள நினைக்கின்றனர்.இந்நிலையில் நூலகம் வெகு தொலைவில் இருப்பதால் குறிப்பாக பெண்கள் நூலகத்திற்கு செல்ல முடியாமல் அச்சப்படுகின்றனர். நூலகத்தில் போட்டித்தேர்வுக்கான அனைத்து புத்தகங்களும் இருந்தாலும் வாசகர்கள் குறைவாக வருவதாக புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி தனியார் கட்டடத்தில் இயங்கி வரும் மைய நூலகத்தை பேருந்து நிலையம் அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்குவதற்கு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள் மற்றும் நூலக அலுவலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.