பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை மழை வேண்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதனிடையே நண்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இஸ்லாமியர் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சிக்கு வட்டார ஜமாத் உலமாக்கள் சபைத் தலைவர் வலியுல்லா தலைமை வகித்தார். செயலாளர் அப்துல்வகாப், போகலூர் இமாம் அப்துல்மாலிக், தெற்குப் பள்ளிவாசல் இமாம் மதார்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மழை வேண்டி உலமாக்கள் சபை செயல் தலைவர் ஜலாலுதீன் சிறப்புத் தொழுகை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஐக்கிய ஜமாத் தலைவர் ஏ.ஜெ.ஆலம் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக வட்டார துணைச் செயலாளர் பீர்முகம்மது வரவேற்றார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பரமக்குடியில் நண்பகல் 1 மணியளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பரமக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கியது. கழிவு நீர் கால்வாய்கள் அடைபட்ட நிலையில், நகர் முழுவதும் மழைநீர் வழிந்தோட வழியின்றி கழிவுநீருடன் கலந்து சாலைகளில் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் கழிவுநீரை வாரி இரைத்தவாறு சென்றதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். இந்த மழை காரணமாக மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.