திருவாடானை அருகே நம்புதாளையில் மீனவர் குடியிருப்பு பகுதியில் செல்லும் மின் கம்பிகள் கை தொடும் அளவிற்கு தாழ்வாகச் செல்வதால், விபத்து அபாயம் நீடிக்கிறது.
நம்புதாளை மீனவக் குடியிருப்பு பகுதியில் சுமார் 500-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள படையாட்சி தெருவில் அமைந்துள்ள பால முருகன் கோயில் அருகே உள்ள உயரழுத்த மின் கம்பிகள் கை தொடும் அளவிற்கு தாழ்வாகச் செல்கின்றன. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகனங்களில் உரசும் அபாய நிலை உள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட மின் வாரிய துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த வழியாக பள்ளி வாகனம், சரக்கு வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் செல்கின்றன. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து மின்கம்பியை சீர் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.