ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 13,030.85 மெட்ரிக் டன் அம்மா சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா சிமென்ட் திட்டம் கடந்த 2015 ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ராமநாதபுரம், ராமேசுவரம், கடலாடி, திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர், கீழக்கரை மற்றும் பரமக்குடி ஆகிய 8 இடங்களிலும் சிமென்ட் விற்பனை நடந்தது.
மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் வாயிலாக மண்டபம், போகலூர், திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் நயினார்கோவில் ஆகிய 5 இடங்கள் என மொத்தம் 13 இடங்களில் அம்மா சிமென்ட் விற்பனை நடைபெற்றது.
அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகள் வரை 13,030.85 மெட்ரிக் டன் அளவுக்கு சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.