அதிமுக போட்டியிடாத மக்களவைத் தொகுதிகளில் அக்கட்சித் தொண்டர்கள் அமமுகவுக்கே வாக்களிப்பர் என ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் என்.ஆனந்த் கூறினார்.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை கட்சியினருனர் கலந்துரையாடிய அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவோரில் அமமுக சார்பில் போட்டியிடும் நான்தான் உள்ளூர் வேட்பாளராக உள்ளேன். ஆகவே தொகுதி பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறை செலுத்துவேன்.
ராமநாதபுரத்தில் அதிமுக போட்டியிடவில்லை. ஆகவே அக்கட்சி தொண்டர்கள் எனக்கு ஆதரவளித்து வருகின்றனர். அதிமுக நிர்வாகிகள் வேண்டுமானால் கூட்டணிக்கு வாக்களிக்கலாம். ஆனால், அதிமுக போட்டியிடாத இடங்களில் அக்கட்சியினர் அமமுகவுக்கே வாக்களிப்பர்.
வரும் 26 ஆம் தேதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி, பரமக்குடி இடைத் தேர்தலுக்கு அமமுக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம். ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் கட்சியின் துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன், பேச்சாளர்கள் நடிகர் செந்தில், ரஞ்சித் உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர் என்றார்.