தேவகோட்டையில் தமிழ் இலக்கியப் பேரவையின் திங்கள் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியையொட்டி, பாரதிதாசன் விழா அண்மையில் நடைபெற்றது.
தேவகோட்டை அருசோ நீலா நூலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கவிஞர் கார்மேகம் தலைமை வகித்தார்.
இதில், மறைந்த திரைப்பட இயக்குநர் மகேந்திரன், கவிஞர் பட்டுக்கோட்டையாரின் மனைவி கெளரவாம்பாள், சிலம்பொலி செல்லப்பன், கதை சொல்லி முத்தையா மற்றும் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர், பாரதிதாசன் பிறந்த நாள் விழாவையொட்டி புரட்சிக்கவி பாவேந்தர் நோக்கில் புதிய சமுதாயம் என்ற தலைப்பில், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் பாகை கண்ணதாசன் சிறப்புரையாற்றினார். இலக்கியப் பேரவையின் தலைவர் அ. அறிவரசன் தொடக்கவுரையாற்றினார்.
பேராசிரியர்கள் மு. பழனி இராகுலதாசன், ஆறுமுகம் மற்றும் ஜோதிசுந்தரேசன், கொ. மணிவண்ணன், வீ. ராமநாதன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னதாக, அ. குமார் வரவேற்றார். எட்வின் நன்றி கூறினார்.