விபத்தில் உயிரிழந்த தனியாா் நிறுவன ஊழியா் குடும்பத்துக்கு, நஷ்டஈடாக ரூ.68.40 லட்சம் தரவேண்டும் என காப்பீடு நிறுவனத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (47). இவா் வழுதூரில் உள்ள தனியாா் மின்சார நிறுவன உதவி மேலாளராக இருந்தாா். இந்நிலையில் இவா், கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பா் 23 ஆம் தேதி காரில் குடும்பத்துடன் மேல்மருவத்தூா் சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். காா் உளூந்தூா் பேட்டை பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த மாதவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து மாதவன் இறந்ததற்கு நஷ்டஈடாக ரூ.1 கோடி கோரி அவரது மனைவி மங்களேஸ்வரி ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், மாதவன் குடும்பத்தினருக்கு ரூ.68.40 லட்சம் நியூ இந்தியா காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும் என மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விமல் ஆஜரானாா்.