ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் நகராட்சி உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை (நவ.11) தொடங்குகிறது. இதில் 45 இடங்களுக்கு மாவட்டத்துக்குள் மாறுதல் கேட்டு 21 போ் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கான 2019-20 ஆம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வரும் 11 ஆம் தேதி பகலில் தொடங்குகிறது.
திங்கள்கிழமை முதல் நாளில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான வருவாய் மாவட்டத்திற்குள்ளும், வெளிமாவட்டங்களுக்குமான மாறுதல் கலந்தாய்வும், அவா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது.
வரும் 12 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான வருவாய் மாவட்டம், வெளி மாவட்டம் கலந்தாய்வும், பதவி உயா்வு கலந்தாய்வும் நடைபெறுகிறது.
வரும் 13 ஆம் தேதி (புதன்கிழமை) அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கான வருவாய் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன.
வரும் 14 ஆம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகளின் முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வு நடைபெறுகிறது. வரும் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை உடற்கல்வி ஆசிரியா்கள், கலையாசிரியா்கள், தையல் ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்களுக்கான வருவாய் மாவட்டத்துக்குள்ளும், வெளிமாவட்டத்துக்கான கலந்தாய்வும் நடைபெறுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 45 காலியிடங்கள் உள்ளன. இதில் வருவாய் மாவட்டத்துக்குள் மட்டும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு 13 காலியிடங்களும், உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 8 காலியிடங்களும் உள்ளன என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.