பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்காவிட்டால் போராட்டம்: திருவாடானை ஊராட்சித் தலைவர்கள் அறிவிப்பு
திருவாடானை பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்காவிட்டால் ஊராட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
திருவாடானை பகுதிகளில் பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்காவிட்டால் ஊராட்சித் தலைவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
திருவாடானையில் 47 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2017 - 18ஆம் வருடம் முதல் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு தொகை பெற்று வருகின்ற நிலையில் ஏராளமான விவசாயிகளுக்கு விடுபட்டுள்ளது. அதே போல் 2019-20 க்கும் பயிர்க் காப்பீடு தொகை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது இன்னும் வரவேண்டிய நிலுவை தொகை உள்ளது என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து பயிர்க் காப்பீடு வழங்கும் காப்பீடு நிறுவனம் அனுகிய போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானைக்கு வழங்கிய தொகை அனைத்தும் வழங்கப்பட்டதாகவும் நிலுவைத் தொகை எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் வேண்டுமென்றே திருவாடானை பகுதிகளில் பயிர்க் காப்பீடு தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் தெரிவித்தனர்.
இன்னும் ஒரு வார காலத்திற்குள் பயிர்க் காப்பீடு இழப்பீடு தொகையை விடுபட்ட விவசாயிகளுக்கு வழங்காமல் காலம் தாழ்த்தினால் 47 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் அதன் விவசாயிகள் ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்கள் நடத்தப் போவதாக ஊராட்சியில் தலைவர்கள் கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான புகார் மனுவினை திங்கள்கிழமை திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் கொடுத்தனர்.