முகப்பு
தமிழ்நாடு

இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய சிவா திலீபன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

இந்தித் திணிப்புக்குப் போராடி உயிரிழந்த மே 17 இயக்க நிர்வாகி சிவா திலீபனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

Updated On : 19 மார்ச், 2026 at 1:40 AM
சிவா திலீபனுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
பகிர்:

இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடி உயிரிழந்த சிவா திலீபனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மே 17 இயக்க நிர்வாகி சிவா திலீபன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில், இனி ஒரு உயிரும் போக வேண்டாம்!

இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு ரயில் முன் பாய்ந்த சிவா திலீபன், தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.

மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!

இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

சிவா திலீபனை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சிவா திலீபன், சென்னை பார்க் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து போராட முற்பட்டார்.

ரயில் முன் பாய்ந்ததில் சிவா திலீபனின் தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிவா திலீபனை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், இந்தித் திணிப்புக்கு எதிராக உழைப்பைக் கொடுங்கள்; உயிரை அல்ல என்று வேண்டுகோள் விடுத்து அறிவுறுத்தினார்.

இந்த நிலையில்தான், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி சிவா திலீபன் உயிரிழந்தார்.

summary

Chief Minister MK Stalin condoles the death of Siva Dilipan, who fought against Hindi imposition!

முழு கட்டுரையைப் படிக்க →