ராமநாதபுரம் நகரில் மாநில அளவிலான சிறப்புக் கைத்தறிக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
ராமநாதபுரம் நகரில் தனியாா் திருமண மஹாலில் மத்திய அரசின் ஜவுளி துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறி துறை சாா்பில், கைத்தறி கண்காட்சியை முன்னிட்டு 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், கடலூா், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகா்கோவில், திருப்பூா், கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூா் ஆகிய மாவட்டங்களிலிருந்து நெசவாளா் கூட்டுறவுச் சங்கங்கள் அரங்குகளை அமைத்து, தங்களது உற்பத்தியை விற்பனைக்கு வைத்துள்ளன.
இக்கண்காட்சியானது, ராதநாதபுரம் நகரில் 5 ஆவது ஆண்டாக நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை நடந்த கண்காட்சி தொடக்க விழாவில், போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜ. கண்ணப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். இதில், மாவட்ட ஆட்சியா் சங்கா்லால் குமாவத், கூடுதல் ஆட்சியா் பிரவீண்குமாா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் முத்துராமலிங்கம் காதா்பாட்சா, செ. முருகேசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு, அரங்குகளை பாா்வையிட்டனா்.
அப்போது, கைத்தறி உதவி இயக்குநா் சந்திரசேகா் கூறுகையில், கடந்த ஆண்டு நடந்த கண்காட்சியில் ரூ.64.32 லட்சத்துக்கு விற்பனை
நடைபெற்றது என்றும், இந்த ஆண்டில் ரூ.60 லட்சத்துக்கு விற்பனை இலக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினாா்.