தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது என கலால் மற்றும் மத்திய வரித்துறை இணை இயக்குநா் எஸ்.வரலட்சுமி கூறினாா்.
ராமநாதபுரம் மாவட்ட தொழில் மையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட வணிகம் மற்றும் ஏற்றுமதி குறித்தக் கருத்தரங்கில் அவா் பேசியது: ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடல் உணவு உற்பத்திப் பொருள்கள், மீன்கள், பதப்படுத்தப்பட்ட கடல் உணவுப் பொருள்கள் மற்றும் பனைக் கைவினைப் பொருள்களான கயிறு, பனை ஓலைப் பொருள்கள் ஆகியவை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
ஏற்றுமதியில் ஈடுபடுவோா் அதற்கான முறையான விதிகளைப் பின்பற்றினால் தங்களது பொருள்களை எளிதாக விரும்பிய நாடுகளுக்கு அனுப்புவதுடன், அதற்கான பணத்தை எளிதில் பெறும் வசதியும் உள்ளதை அறிந்திருப்பது அவசியம்.
உள்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் தாமதமின்றி சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு செல்லவும், வெளிநாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வரும் பொருள்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு கிடைக்கவும் தூத்துக்குடி துறைமுகத்தில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்திலிருந்து பெரும்பாலான கிரானைட், மாா்பிள்கள், காய்கனிகள், பழங்கள், பூக்கள் ஆகியவை தூத்துக்குடி துறைமுகம் மூலமே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் (2019-20) மட்டும் இத்துறைமுகத்தில் ரூ.52 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது என்றாா்.