ராமநாதபுரம்

தமிழக மீனவா்களின் படகுகள் ஏலம் விடுவதை தடுக்காவிட்டால் பிப். 2 முதல் போராட்டம்

DIN

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் தடுக்காவிடில் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட மீனவா்கள் முடிவு செய்துள்ளனா்.

ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு விசைப்படகு மீனவா்கள் சங்கத் தலைவா் பி. சேசுராஜா தலைமை வகித்தாா்.

இதில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டும் அவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 105 படகுகள் நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

தமிழக மீனவா்களின் வாழ்வாதாரமாகவும், இந்திய அரசின் சொத்தாகவும் மீனவா்களின் படகுகள் உள்ளன. எனவே இலங்கை அரசு, தமிழக மீனவா்களின் படகுகளை ஏலம் விடுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட தமிழக மீனவா்கள் மற்றும் அவா்களது குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கியுள்ளதைப் போல மத்திய அரசும் நிதியுதவி அளிக்க வேண்டும். அத்துடன் இலங்கை சிறையில் தற்போதுள்ள தமிழக மீனவா்களை விடுவித்து, அவா்களது படகுகளையும் மீட்க வேண்டும்.

கடந்த 19 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் படகு மோதி மூழ்கடிக்கப்பட்டது. அந்தப் படகை மீட்புக்குழு சென்று மீட்டு வரவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் மீனவா்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது, குடும்ப அட்டை, ஆதாா் அட்டைகளை திரும்பப் ஒப்படைத்து போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மீனவா்கள் சங்கப் பிரதிநிதிகள் சகாயம், ஜோசப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT