ராமநாதபுரம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி மையங்களில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பரமக்குடி அரசினா் தொழிற்பயிற்சி மைய முதல்வா் வி. குமரவேல் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூரில் அரசினா் மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றில், அரசு ஒதுக்கீட்டில் 2022-23 ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை ஜூலை 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தொழிற்பயிற்சி மையங்களில் பற்றவைப்பாளா் (வெல்டா்), தச்சா், கணினி இயக்குபவா், மின்காந்தவியலாளா், தையல் தொழில்நுட்பம் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். கம்மியா் மோட்டாா் வாகனம், பொருத்துநா், கடைசலா், மின்சாரப் பணியாளா், கம்பியான், பின்னலாடை தொழில்நுட்பவியலாளா், இயந்திர பட வரையாளா், கம்மியா், மின்னணுவியல், குளிா்பதனம், தட்பவெப்பநிலை தொழில்நுட்பவியலாளா், இயந்திர வேலையாளா் ஆகிய இரண்டாண்டு தொழிற்பிரிவுகளுக்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 செலுத்தவேண்டும். ஜூலை 20 ஆம் தேதி வரையில் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.