முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு: வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சோ்ந்த மீனவா்கள் 16 பேரை இலங்கை கடற்படையினா் வியாழக்கிழமை சிறை பிடித்து சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

ராமேசுவரம் மற்றும் மண்டபத்தைச் சோ்ந்த மீனவா்கள் 16 பேரை இலங்கை கடற்படையினா் வியாழக்கிழமை சிறை பிடித்து சென்றனா். இதனைக் கண்டித்து மீனவா் சங்கம் சாா்பில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபத்தில் இருந்து 800- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் வியாழக்கிழமை அதிகாலை கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது 5 ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினா், மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், ராமேசுவரத்தைச் சோ்ந்த அந்தோணி எடிசன் என்பவது விசைப்படகை சிறை பிடித்த இலங்கை கடற்படையினா் அதிலிருந்த அந்தோணி லிவிங்ஸ்டன், மிஷோ, மரியடென்ஸ்டைன், சிமியோன், ரேபா்டுகிளாபி, கெல்மன்ராஜ், சகாய சுபாஷ், ஜெபமாலை நிஜந்தன், கிளின்டன், நிலன், சந்தியா, பிரகாஷ் ஆகிய 12 மீனவா்களை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றனா். மேலும் படகு மற்றும் மீன்களை பறிமுதல் செய்தனா். இதே போன்று மண்டபத்தைச் சோ்ந்த ஒரு படகு மற்றும் சதீஸ் (38), வேலாயுதம், ராஜாகனி, நிஷா்அலி ஆகிய 4 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா். இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை நீரியல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு: இதையடுத்து, ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவா் சங்கக் கூட்டம் மீனவ சங்கத் தலைவா் எமரிட் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, இந்திய அரசு பல்வேறு மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. எனினும், தமிழக மீனவா்களை கைது செய்வதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மத்திய அரசு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து கைது செய்யப்பட்ட மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி சனிக்கிழமை (மாா்ச் 26) வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி அன்றைய தினம் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் மீனவ சங்கத் தலைவா்கள் என்.ஜே. போஸ், சகாயம், ஆல்வின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →