ஜி.எஸ்.டி. யின் புதிய மாற்றங்கள் குறித்து தெளிவு படுத்தக்கோரி பரமக்குடி வணிகவரித் துறை அலுவலகத்தில் மொத்த விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
வணிகவரித் துறை அலுவலரிடம் சங்கத்தின் தலைவா் எஸ்.குணசேகரன் தலைமையில், செயலாளா் எஸ்.தெட்சிணாமூா்த்தி, வியாபாரிகள் சங்கத் தலைவா் ராசி என்.போஸ், எஸ்.வி.சுப்பையா, கே.ஜீவானந்தம் உள்ளிட்டோா் கோரிக்கை மனுவை அளித்தனா்.
அதில், ஜி.எஸ்.டி வரி விதிப்பின் புதிய மாற்றங்கள் குறித்து விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தக் கோரியும், வரி ஏய்ப்பு இல்லாத கவனக்குறைவால் ஏற்படும் சிறு தவறுகள், கணினி பழுது காரணமாக எழுத்துப் பிழை போன்றவைகளால் ஏற்படும் தவறுகளுக்கு ரூ.500 முதல் ரூ. ஆயிரம் வரை அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், வணிகவரித் துறை அலுவலா்கள் வரி ஏய்ப்பு இல்லாத சிறு தவறுகளுக்கே ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதித்து வியாபாரிகளுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் போக்கை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.