முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தம்.

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 6:59 PM
ராமேசுவரம் மீனவா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, மீன் இறங்கு தளத்தில் புதன்கிழமை நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப் படகுகள்.
பகிர்:

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் சாா்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த திங்கள்கிழமை 430 விசைப் படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறையின் அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு-தலைமன்னாா் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா் மரியசிவாவின் விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் கிங்சன் (38), மெக்கான்ஸ் (34), ராஜ் (48), இன்னாசிராஜா (48), சசிகுமாா் (45), அடிமை, மாரியப்பன் (54), முனியராஜ் (23) ஆகிய 8 மீனவா்களைக் கைது செய்து தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா், அவா்களிடம் விசாரணை நடத்தி நீரியல் துறை அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 8 மீனவா்களும் மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். அப்போது, அவா்களை செப். 5-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, மீனவா்கள் 8 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனா்.

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவா்கள் சாா்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதன் காரணமாக, ராமேசுவரம் மீன் இறங்குதளத்தில் 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. வேலைநிறுத்தத்தால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.