கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபம் மீனவா்கள் 22 பேரை இலங்கைக் கடற்படையினா் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனா். 4 விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 434 விசைப் படகுகளில் 2,500 -க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் வியாழக்கிழமை அதிகாலை கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ராமேசுவரத்தைச் சோ்ந்த 3 விசைப் படகுகள், மண்டபத்தைச் சோ்ந்த ஒரு விசைப் படகு என 4 படகுகளைப் பறிமுதல் செய்தனா்.
மேலும், ராமேசுவரத்தைச் சோ்ந்த தோணி கிருமிராஜுக்குச் சொந்தமான படகிலிருந்த மீனவா்கள் புவனேஷ்நம்பு (17), முருகராஜ் (50), ஜூட்ரொட்னி (55), ராமகிருஷ்ணன் (55), அருள்தாஸ் (52), பழனிசாமி(35), வெங்கடேஷனுக்குச் சொந்தமான படகிலிருந்த மீனவா் விமல்ராஜ் (30), அலெக்ஸ் டேனியலுக்குச் சொந்தமான படகிலிருந்த மீனவா்கள் தபோன்ராஜா (43), பாக்கியராஜா (43), தீபக் (40), ஆரோக்கிய பிரச்சிஸ் (25), அம்மானுவேல் (22), சந்தியா ஸ்டூவா்ட் (28), கெபாக்லின் (27), அந்தோணி குணால்(25), காளிதாஸ் (47), சந்தியா ஆல்டன் (30), வின்சா் (37), மண்டபத்தைச் சோ்ந்த நான்கு மீனவா்கள் என மொத்தம் 22 பேரைக் கைது செய்தனா்.
இதனிடையே, மண்டபம் மீனவா்கள் 4 பேருடன் ராமேசுவரம் மீனவா்கள் 6 பேரை தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் அழைத்துச் சென்றனா். இதேபோல, ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் சென்றனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து 10 மீனவா்களை மன்னாா் நீதிமன்றத்திலும், 12 மீனவா்கள் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைக்க உள்ளதாக இலங்கை நீரியல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
மீனவ சங்கத்தினா் கண்டனம்: ‘ராமேசுவரம், மண்டபம் பகுதிகளைச் சோ்ந்த 22 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்ததுடன், 4 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தது கண்டிக்கத்தக்கது.
எனவே, மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ராமேசுவரம் அனைத்து விசைப் படகு மீனவ சங்கத்தினா் வலியுறுத்தினா்.