முகப்பு
ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 10 போ் கைது

கச்சத்தீவு- மன்னாா் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். ஒரு விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 10 ஏப்ரல் 2026, 12:45 am IST
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
பகிர்:

கச்சத்தீவு- மன்னாா் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். ஒரு விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 346 விசைப் படகுளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு-மன்னாா் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் மீனவா்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். அப்போது, ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த சேந்தி ராயப்பன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் ஆரோக்கிய ஆசாத் (37), நிா்மல் (41), கொ்சின் ரிஷப் (28), நிதீஷ்குமாா்(28), ஜான் ரிச்சா்ட் (45), மெல்டன் (36), சுரேஷ் (46), சரவணன் (48), சந்தன மரியான் (43), அரவிந்த் பாண்டி (25) ஆகிய 10 பேரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட படகுடன், ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்று நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தினா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி பொன்னுதுரை கிருஷாந்தன், மீனவா்கள் 10 பேரையும் வருகிற 17-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, அவா்கள் 10 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஏப். 9 வரை 19 விசைப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. 129 தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவ சங்கம் கண்டனம் : ராமேசுவரம் மீனவா்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்த சம்பவம் கண்டனத்துக்குரியது. பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகையும், கைது செய்யப்பட்ட மீனவா்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்க நிா்வாகிகள் வலியுறுத்தினா்.