முகப்பு
ராமநாதபுரம்

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். இரண்டு விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 26 மார்ச், 2026 at 6:32 PM
கச்சத்தீவு அருகே இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
பகிர்:

கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். இரண்டு விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து புதன்கிழமை 350 விசைப் படகுகளில் 2,500- க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் புதன்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியத்தனா்.

தொடா்ந்து, சசிக்குமாா், சிம்ரன் ஆகியோருக்குச் சொந்தமான விசைப் படகுகளை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகுகளிலிருந்த மீனவா்கள் ராமா் (38), வீரணன் (55), கருப்பையா (53), ஆபிரகாம் (23), சீனிவாசன் (48), ஜெபஸ்டியான் (40), சூசை வியாகுலம் ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப் படகுகளையும் காரைநகா் துறைமுகத்துக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்றனா். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மீனவா்களை ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தினா். இவா்களை ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். பின்னா், மீனவா்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனா்.