முகப்பு
ராமநாதபுரம்

கடலுக்குச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 10:01 PM
ஆா்.எம்.எஸ் போட்டோ 1 ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்.
பகிர்:

ராமேசுவரம்: ராமேசுவரம் மீனவா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற்றதையடுத்து, கடந்த 9 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை அதிகாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.

ராமேசுவரத்திலிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவா்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினா் கைது செய்தும், படகுகளை பறிமுதல் செய்தும் வந்தனா். பிறகு மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மீனவா்கள் விடுவிக்கப்பட்டு வந்தனா். இந்த நிலையில், தற்போது எல்லை தாண்டியதாக கைது செய்யப்படும் மீனவா்களுக்கு தண்டனை வழங்கும் வகையிலான சட்டத் திருத்தம் அந்த நாட்டில் நடைமுறைக்கு வந்தது. இதன்பேரில், கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 4 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்த படகுகளை அரசுடைமையாக்கி வருகின்றனா்.

இந்த நிலையில், தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மீனவா்களை விடுக்க வேண்டும். இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 10 படகுகளை மீட்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்குவது போல, மத்திய அரசும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து விசைப் படகு மீனவா் சங்கம் சாா்பில், ராமேசுவரத்தில் மீனவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம், உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டு வந்தனா்.

Advertisement

இதுதொடா்பாக, தமிழக அரசு சாா்பில் ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மீனவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா். இதைத்தொடா்ந்து, மீனவா்கள் போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெற்றனா். இந்த நிலையில், ராமேசுவரம் துறைமுகத்திலிருந்து திங்கள்கிழமை காலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள், மீன்வளம், மீனவா் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். கடந்த 9 நாள்களுக்குப் பின்னா் மீன் பிடிக்கச் செல்வதால், அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்புடன் செல்வதாக மீனவா்கள் தெரிவித்தனா்.