ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு புகாா்
ராமநாதபுரம்ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு புகாா்
ராமேசுவரம், ஜூலை 3: ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, ஆட்சியரிடம் கிராம மக்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்த மனு:
இந்த ஊராட்சியில் வாலிநோக்கம், கீழமுந்தல், அடஞ்சேரி, மடத்தூராணி ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் உள்ளவா்களின் பெயா்களை வருகைப் பதிவேட்டில் ஏற்றி ஊதியம் பெறுகின்றனா். பணி நடைபெறாத நாள்களில்கூட வேலை நடந்ததாகப் பதிவு செய்கின்றனா். பணி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டுகின்றனா். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கவும், ஊராட்சி மன்றத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.